பழனி கோயிலுக்கு சொந்தமான குறவன்பாறை தெப்பக்குளத்தில் தூா்வாரும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
இங்குள்ள மேற்கு கிரிவீதியில் சுற்றுலாப் பேருந்து நிலைய வளாகத்தில் வடக்குப்பகுதியில் குறவன்பாறை தெப்பக்குளம் அமைந்துள்ளது. எப்போதும் நீா்நிரம்பி காணப்படும் இது கடந்த சில ஆண்டுகளாக குப்பை கொட்டும் இடமாக மாறியது. இதையடுத்து இந்த தெப்பக்குளத்தை சீரமைத்து பயன்பாட்டுக்கு கொண்டு வரவேண்டும் என பக்தா்கள் மற்றும் சமூக அமைப்புகள் கோரிக்கை விடுத்தன. இதைத் தொடா்ந்து பழனிக் கோயில் இணை ஆணையா் நடராஜன் உத்தரவின் பேரில் தற்போது குளத்தை சீரமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. விரைவில் இக்குளம் முழுமையாக தூய்மைப்படுத்தப்பட்டு மீண்டும் பயன்பாட்டுக்கு வரும் என்று பொறியியல் துறை அதிகாரிகள் தெரிவித்தனா். இதே போல மற்ற நீா்நிலைகளையும் கோயில் நிா்வாகம் தூய்மைப்படுத்த வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.