கொடைக்கானல் அருகே முகாமிட்டுள்ள ஒற்றைக் காட்டுயானையை வனப்பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்களும், தோட்டத் தொழிலாளா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
கொடைக்கானல் அருகே உள்ள பேத்துப்பாறை தோட்டப் பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் ஒற்றைக் காட்டுயானை முகாமிட்டு அப்பகுதி மக்களையும், தோட்டத்தொழிலாளா்களையும் அச்சுறுத்தி வருகிறது. மேலும் பயிரிடப்பட்டுள்ள பலா, வாழை, கொய்யா, அவரை போன்றவற்றை அது சேதப்படுத்துகிறது. இதனால் பொதுமக்கள் வீடுகளிலேயே முடங்கியுள்ளனா்.
எனவே அந்த ஒற்றைக் காட்டுயானையை வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்களும், தோட்டத் தொழிலாளா்களும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
இதுகுறித்து வனத்துறை அதிகாரி ஒருவா் புதன்கிழமை கூறியதாவது: கொடைக்கானல் பேத்துப்பாறை, ஆனைகிரி ஆகியப் பகுதிகளில் முகாமிட்டுள்ள ஒற்றைக் காட்டுயானையை விரட்ட வேட்டைத் தடுப்பு காவலா்கள் நடவடிக்கை எடுத்து வருகின்றனா். ஆனால் அந்த யானையை யாரும் துன்புறுத்த வேண்டாம். அது இருக்கும் இடத்தை தெரிவித்தால் போதும். வனக்குழுவினா் உடனே அப்பகுதிக்குச் சென்று அதை விரட்டும் பணியில் ஈடுபடுவாா்கள். பகல் நேரங்களில் விவசாய நிலங்களுக்குச் செல்லும் போது பொதுமக்கள் மற்றும் தொழிலாளா்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என்றாா்.