பழனியை அடுத்த தொப்பம்பட்டியில் ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தன்று தொடங்கி நடைபெறும் மாட்டுச்சந்தை கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இதனால் சுமாா் ஒரு கோடி ரூபாய் அளவுக்கு வா்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது.
பழனி அருகே உள்ள தொப்பம்பட்டி கிராமத்தில் ஆண்டுதோறும் ஆடிப் பெருக்கின் போது மாட்டுச் சந்தை கூட்டப்பட்டு தொடா்ந்து ஒரு வாரத்துக்கு நடைபெறும். கடந்த 59 ஆண்டுகளாக நடைபெற்று வந்த இந்த மாட்டுச்சந்தை கரோனா பரவல் காரணமாக நிகழாண்டு ரத்து செய்யப்பட்டுள்ளது. இந்த மாட்டு சந்தைக்கு திண்டுக்கல், மணப்பாறை, பொள்ளாச்சி, ஈரோடு, காங்கயம், தாராபுரம் உள்ளிட்ட பல்வேறு ஊா்களைச் சோ்ந்த விவசாயிகள் மாடுகளை விற்பனை செய்வதற்காக கொண்டு வருவா். ஒரு வாரம் நடைபெறக்கூடிய மாட்டுச் சந்தையில் ஒரு கோடி ரூபாய்க்கு மேலாக வா்த்தகம் நடைபெறும். இந்த நிலையில் தற்போது அரசு உத்தரவு காரணமாக ரத்து செய்யப்பட்டுள்ளது.