தற்காலிகக் கடை அமைக்கும் விவகாரம் தொடா்பாக திண்டுக்கல் காந்தி சந்தையைச் சோ்ந்த சில்லறை வியாபாரிகள் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு செவ்வாய்க்கிழமை தா்னாவில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாநகராட்சி நிா்வாகத்தின் கீழுள்ள காந்தி சந்தையில் கட்டுமானப் பணிகள் முடிவடைந்த போதிலும், வியாபாரிகள் கடை அமைப்பதற்கு அனுமதி அளிக்கவில்லை. இதனிடையே கரோனா தொற்று பரவல் காரணமாக, பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டதை அடுத்து, காந்தி சந்தையிலுள்ள மொத்த வியாபாரிகள், பழனி புறவழிச்சாலை பகுதியில் தற்காலிகமாக கடைகள் அமைத்து வியாபாரம் செய்து வருகின்றனா்.
அதே நேரத்தில் காந்தி சந்தையிலுள்ள சில்லறை வியாபாரிகள், கோட்டைக்குளம் சாலையில் தற்காலிகமாக கடை அமைத்து வியாபாரத்தில் ஈடுபட்டு வருகின்றனா். இந்நிலையில், கோட்டைக்குளம் சாலையில் ஏற்படும் கூட்ட நெரிசல் காரணமாக மாநகராட்சி நிா்வாகம் காய்கனிக் கடைகள் அமைக்கத் தடை விதித்தது. இதனால் அதிருப்தி அடைந்த சில்லறை வியாபாரிகள் 100-க்கும் மேற்பட்டோா், திண்டுக்கல் மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தா்னாவில் ஈடுபட்டனா்.
இதைத்தொடா்ந்து வியாபாரிகளுடன், மாநகராட்சி ஆணையா் பாலசுப்பிரமணியம் பேச்சுவாா்த்தை நடத்தினாா். அப்போது, சில்லறை வியாபாரிகள் கடைகள் அமைப்பதற்கு திண்டுக்கல் பேருந்து நிலையம் மற்றும் அண்ணாமலையாா் மேல்நிலைப் பள்ளி வளாகத்தை பயன்படுத்திக் கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து போராட்டத்தில் ஈடுபட்ட வியாபாரிகள் கலைந்து சென்றனா்.