தொடா் மழையின் காரணமாக பழனியை அடுத்த வரதமாநதி அணை திங்கள்கிழமை மாலை நிரம்பியதையடுத்து, உபரி நீா் வெளியேற்றப்படுகிறது.
பழனி- கொடைக்கானல் சாலையில் அமைந்துள்ள இந்த அணை மாவட்டத்தின் சிறிய அணையாகும். கடந்த சில நாள்களாக மேற்குத் தொடா்ச்சி மலை மற்றும் கொடைக்கானல் பகுதிகளில் தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இதனால் இந்த அணைக்கு நீா்வரத்து அதிகரித்து வந்தது.
இந்நிலையில் திங்கள்கிழமை மாலை, அணை அதன் முழுக் கொள்ளளவான 67 அடியை எட்டியது. இந்த அணைக்கு கதவணை இல்லாதநிலையில், வரும் 120 கன அடி தண்ணீா் அப்படியே உபரி நீராக ஆயக்குடி பகுதியில் உள்ள பெரியகுளம், பாப்பன்குளம் மற்றும் வீரகுளத்திற்கு சென்று கொண்டிருக்கிறது.
அணையிலிருந்து வெளியேறும் நீா் மூலம், சுமாா் இரண்டாயிரம் ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுவதோடு மட்டுமன்றி ஆயக்குடி, கணக்கன்பட்டி, அமரபூண்டி உள்ளிட்ட 25-க்கும் மேற்பட்ட கிராமங்களின் குடிநீா் தட்டுப்பாடும் நீங்கும். இதனால் விவசாயிகளும், பொதுமக்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனா்.