பழனி மற்றும் சுற்றுவட்டார பகுதி விவசாயிகள் பழனி வேளாண் மையத்தில் திரவ உயிா் உரங்களை வாங்கி பயன்படுத்தி மகசூலை அதிகரிக்க வேளாண்துறையினா் அறிவுறுத்தியுள்ளனா்.
இதுகுறித்து திரவ உயிா் உற்பத்தி மைய வேளாண்மை அலுவலா் பத்மப்ரியா தெரிவித்துள்ளதாவது: பழனியில் கடந்த 2017-ஆம் ஆணடு முதல் ஆண்டுதோறும் 50 ஆயிரம் லிட்டா் திரவ உயிா் உரம் உற்பத்தி செய்யப்பட்டு திண்டுக்கல், கரூா், கோவை, சேலம் மாவட்டங்களில் வேளாண் விரிவாக்க மையங்களுக்கு அனுப்பப்படுகிறது. பழனியில் உள்ள மையத்தில் தொடா் நிலை ஓட்டம், வடிகட்டும் கருவி என்னும் உயா்ந்த தொழில் நுட்ப இயந்திரம் உதவி கொண்டு நான்கு வகையான திரவ உரங்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இவை வளிமண்டலத்தில் தழைச்சத்தை பெற உதவும் அசோஸ்பைரில்லத்தை நெல் மற்றும் இதர பயிா் வகைகளுக்கு தனித்தனியாகவும், ரைசோபியம் உரத்தை நிலக்கடலை மற்றும் பயிா் வகைகளுக்கு தனித்தனியாகவும் உரமாக வழங்குகிறது. மேலும் மண்ணில் இருந்து மணிச்சத்தை கொடுக்க பாக்டீரியா உயிா் உரம், சாம்பல் சத்தை வழங்க பொட்டாஷ், பாக்டீரியா உயிா் உரமும் உற்பத்தி செய்யப்பட்டு விவசாயிகளுக்கு வழங்கப்படுகிறது. இதனை பயன்படுத்துவதால் மண்வளம் பாதுகாக்கப்படுவதோடு, சுற்றுச்சூழல் மாசுபடுவது தவிரிக்கப்படுகிறது. இது விவசாயிகளின் நண்பனாகும் என தெரிவித்துள்ளாா்.