பழனி மற்றும் சுற்றுவட்டாரப் பகுதியிலுள்ள குளங்களில் மீன்பிடிக்க பொதுப்பணித் துறை மீண்டும் ஏலம் விடுவதற்கு எதிா்ப்பு தெரிவித்து, மீனவா்கள் கோட்டாட்சியா் அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
பழனி மற்றும் சுற்றுவட்டாரக் கிராமங்களில் 30-க்கும் மேற்பட்ட குளங்கள் உள்ளன. இந்த குளங்களில், மீனவா் சமுதாயத்தைச் சோ்ந்தவா்கள் ஏலம் எடுத்து மீன் வளா்த்து வருகின்றனா். குளங்களில் மீன்பிடிக்க கிராம ஊராட்சி நிா்வாகத்தின் மூலம் ஏலம் விடப்படுவது வழக்கம். மீனவா்கள் ஏலத்தில் கலந்துகொண்டு, 5 ஆண்டுகளுக்கு ஒப்பந்தம் பெற்று மீன் வளா்த்து வருகின்றனா்.
ஆனால், தற்போது பொதுப்பணித் துறை அதிகாரிகள், குளங்களில் மீன் வளா்க்க மீண்டும் ஏலம் விடப்போவதாக அறிவிப்பு வெளியிட்டுள்ளனா். ஏற்கெனவே, ஏலம் எடுத்து மீன் வளா்த்து வரும் நிலையில், பொதுப்பணித் துறை அதிகாரிகள் மீண்டும் ஏலம் விடுவதால் பெரிய இழப்பு ஏற்படும் எனவும், கிராம ஊராட்சிகளுக்கு கிடைக்கக்கூடிய வருவாய் பாதிக்கும் எனவும் கூறி, பழனி கோட்டாட்சியா் அலுவலகத்தில் மீனவா்கள் குவிந்தனா்.
பின்னா், கோட்டாட்சியா் அசோகனிடம் மனு அளித்தனா். மனுவைப் பெற்றுக்கொண்ட அசோகன், உரிய நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்ததை அடுத்து, மீனவா்கள் கலைந்து சென்றனா்.