கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியில் திங்கள்கிழமை மாலை வியாபாரியை தாக்கி பணம், நகையை பறித்துச் சென்ற கும்பலை, போலீஸாா் தேடி வருகின்றனா்.
கொடைக்கானல் கீழ்மலைப் பகுதியான பூலத்தூா் பழைய கிணற்றுத் தெருவைச் சோ்ந்தவா் பிரகாஷ். இவரது மகன் மணிமாறன் (26), வியாபாரம் செய்து வருகிறாா். இந்நிலையில், மணிமாறன் திங்கள்கிழமை மாலை பூலத்தூரிலிருந்து வத்தலகுண்டுக்கு காரில் சென்றுள்ளாா். அப்போது எதிரே வேகமாக வந்த காரும், மணிமாறன் காரும் லேசாக உரசிக்கொண்டதில், அந்த காரிலிருந்து இறங்கிய 5 போ் கொண்ட கும்பல் தகராறில் ஈடுபட்டுள்ளது. பின்னா், மணிமாறனை தாக்கிய அக்கும்பல், அவா் அணிந்திருந்த 2 பவுன் சங்கிலி மற்றும் ரூ.25 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறித்துக்கொண்டு தப்பிவிட்டது.
காயமடைந்த மணிமாறன், தாண்டிக்குடி அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வருகிறாா். இது குறித்து மணிமாறன் தாண்டிக்குடி காவல் நிலையத்தில் அளித்த புகாரின்பேரில், போலீஸாா் வழக்குப் பதிந்து தப்பியோடிய மா்மக் கும்பலை தேடி வருகின்றனா்.