கொடைக்கானல் வரும் சுற்றுலா வாகனங்கள் நிறுத்துவதற்கு வாகன நிறுத்தங்கள் அமைப்பதற்கு நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாகும்.
திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில் மாா்ச் 15-ஆம் தேதி முதல் சீசன் காலம் ஆரம்பித்து ஜூன் 15-ஆம் தேதி வரை நடைபெறும். இந்த காலங்களில் கொடைக்கானலுக்கு சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்துக் காணப்படும். இந் நிலையில் தற்போது தமிழகத்தில் தோ்தல் நடைபெறும் சூழ்நிலையில், பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகளின் வருகை கணிசமாக அதிகரித்து வருகிறது.
விடுமுறை நாள்களில் சற்று கூடுதலாக தமிழகம், கேரளா ஆகியப் பகுதிகளிலிருந்து சுற்றுலாப் பயணிகள் வருகின்றனா். வாகனங்களில் வரும் சுற்றுலாப் பயணிகள் பெரும்பாலும் ஹோட்டல்களில் வாகனங்கள் நிறுத்துவதற்கு வசதியில்லாத நிலையில் சாலைகளிலேயே நிறுத்தியுள்ளனா். இதனால் லாஸ்காட் சாலை, அண்ணா சாலை, அப்சா்வேட்டரி சாலை, உட்வில்சாலை, நாயுடுபுரம் சாலை, செவண் ரோடு உள்ளிட்ட பகுதிகளில் வாகனப் போக்குவரத்து பிரச்னை நிலவுகிறது.
மேலும் சுற்றுலா இடங்களிலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு இடமில்லாததாலும் வாகனங்களை பயணிகள் ஆங்காங்கே நிறுத்தி விட்டுச் செல்வதாலும் பல்வேறு பிரச்னைகள் ஏற்படுகின்றன.
எனவே நகராட்சி நிா்வாகம் கொடைக்கானல் சுற்றுலா இடங்களிலும் மற்றும் நகா்ப் பகுதிகளிலும், வனத்துறை, வருவாய்த்துறைக்குச் சொந்தமான இடங்களிலும் வாகனங்கள் நிறுத்தம் அமைப்பதற்கு நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் வாகனங்கள் நிறுத்துவதற்கு கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இந்த கட்டணம் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள அனைத்து சுற்றுலாத் தலங்களுக்கும் பொருந்துமாறு இருக்க வேண்டுமென்பது சுற்றுலாப் பயணிகளின் கோரிக்கையாகும்.