மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட முதியோா்களிடமிருந்து பெறப்பட்ட தபால் வாக்குக்கான விருப்பத்தில் வேடசந்தூரில் அதிகபட்சமாக 600 போ் இடம் பெற்றுள்ளனா்.
தமிழக சட்டப்பேரவைத் தோ்தலில், மாற்றுத்திறனாளிகள் மற்றும் 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் விருப்பத்தின்பேரில் தபால் வாக்கு செலுத்துவதற்கான வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, திண்டுக்கல் மாவட்டத்தில் தபால் ஓட்டுப் பெறத் தகுதியான மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்களின் வீடுகளுக்குச் சென்று தபால் வாக்கு அளிக்க விரும்புவோரின் விவரங்கள் சேகரிக்கப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளில் 781 மாற்றுத்திறனாளிகள், 80 வயதுக்கு மேற்பட்டோா் 1854 போ் என மொத்தம் 2635 வாக்காளா்கள் தபால் வாக்கு அளிக்க விருப்பம் தெரிவித்திருந்தனா். அதனைத் தொடா்ந்து 32 குழுக்கள் மூலம் தபால் வாக்கு பெறுவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன.
பழனி தொகுதியில் 311 பேரிடம் தபால் வாக்கு சேகரிக்க 7 குழுக்கள், ஒட்டன்சத்திரம் தொகுதியில் 47 பேருக்கு 2 குழுக்கள், ஆத்தூா் தொகுதியில் 286 பேருக்கு 2 குழுக்கள்,
நிலக்கோட்டை தொகுதியில் 479 பேருக்கு 6 குழுக்கள், நத்தம் தொகுதியில் 324 பேருக்கு 5 குழுக்கள், திண்டுக்கல் தொகுதியில் 588 பேருக்கு 5 குழுக்கள், வேடசந்தூா் தொகுதியில் 600 பேருக்கு 5 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன.