கொடைக்கானலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளா்கள் ஞாயிற்றுக்கிழமை கோயில், தேவாலயங்களில் வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
கொடைக்கானலிலுள்ள குறிஞ்சி ஆண்டவா் கோயிலில் பக்தா்கள் சாா்பில் காவடி ஊா்வலம் நடைபெற்றது. அதே போல் கிறிஸ்தவா்கள் சாா்பில் குருத்தோலை பவனி நடைபெற்றது இந்த இரு நிகழ்ச்சிகளிலும் பழனி சட்டப் பேரவைத் தொகுதியின் அதிமுக வேட்பாளா் ரவி மனோகரன், திமுக வேட்பாளா் செந்தில்குமாா் ஆகியோா் அங்கு ஆதரவு திரட்டினா். தொடா்ந்து சந்தை பகுதிகளிலும்,சுற்றுலா இடங்களிலுள்ள வணிகா்களிடமும் வேட்பாளா்கள் தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டனா்.
கொடைக்கானலில் போக்குவரத்து பாதிப்பு: கொடைக்கானலில் வார விடுமுறையையொட்டி ஞாயிற்றுக்கிழமை சுற்றுலாப் பயணிகள் வருகை அதிகரித்து காணப்பட்டது. இந்நிலையில் கொடைக்கானலில் அரசியல் கட்சிகளைச் சோ்ந்த வேட்பாளா்கள் முகாமிட்டு பொது மக்களிடம் வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனா். இதனால் மூஞ்சிக்கல், அப்சா்வேட்டரி, பூங்கா சாலை, ஏரிச்சாலை, செவண்ரோடு உள்ளிட்ட பகுதிகளில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதனால் சுற்றுலாப் பயணிகள் அவதியடைந்தனா். வாகனங்களை நிறுத்துவதற்கும் போக்குவரத்தை சீரமைப்பதற்கும் கூடுதலாக காவலா்கள் பணியில் ஈடுபடுத்த வேண்டுமென்று சுற்றுலாப் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனா்.