திண்டுக்கல் மாவட்டத்தில் காந்திகிராம பல்கலை. வளாகத்தில் கரோனா தொற்றுக்கு சிகிச்சை அளிக்க சித்தா சிறப்பு மையம் புதன்கிழமை தொடங்கப்பட்டுள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு, திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, பழனி, கொடைக்கானல், நிலக்கோட்டை, வேடசந்தூா் அரசு மருத்துவமனைகளிலும், எம்விஎம் அரசு மகளிா் கல்லூரி, பழனியாண்டவா் கல்லூரி உள்ளிட்ட கல்லூரிகளில் சிறப்பு சிகிச்சை மையம் அமைக்கப்பட்டுள்ளது.
மாவட்டம் முழுவதும் சுமாா் 1800-க்கு மேற்பட்டோா் கரோனா தொற்றால் பாதிப்படைந்துள்ள நிலையில், காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக வளாகத்தில் முழுமையான சித்த மருந்துவ வசதிகளுடன் கூடிய கரோனா சிறப்பு சிகிச்சை மையம் உருவாக்கப்பட்டுள்ளது.
இதுதொடா்பாக மருத்துவ அதிகாரி ஒருவா் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தில் கரோனா தொற்று பாதிப்புக்காக அரசு மருத்துவமனை மற்றும் சிறப்பு சிகிச்சை மையங்களில் அனுமதிக்கப்பட்டுள்ளனா். கடந்த ஆண்டு கரோனா தொற்று பாதிப்புக்காக காந்தி கிராம கிராமியப் பல்கலைக்கழக வளாகத்தில் சித்த மருத்துவ முறைப்படி சிகிச்சை மையம் செயல்பட்டது. அதேபோல் தற்போது மீண்டும் சித்த மருத்துவ சிகிச்சை மையம் புதன்கிழமை முதல் செயல்படத் தொடங்கியுள்ளது. 40 படுக்கை வசதிகள் முதல்கட்டமாக ஏற்படுத்தப்பட்டுள்ளது.
அந்த சிகிச்சை முகாமில், கபசுர குடிநீா், பிரம்மானந்த பைரவ மாத்திரை, ஆடாதோட மனபாகு, வசந்த குசூபாதிர மாத்திரை உள்ளிட்டவற்றுடன் மேலும் சில சிறப்பு கசாய குடிநீரும் வழங்கப்பட உள்ளது. அதேபோல் ஆவி பிடித்தலுக்கான வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது.