கொடைக்கானலில் வியாழக்கிழமை பெய்த மழையின் காரணமாக மயிலாடும் பாறை அருகே சாலையில் மரம் விழுந்ததால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொடைக்கானலில் கடந்த 15-நாள்களுக்கும் மேலாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த மழையால் விவசாய நிலங்களில் தண்ணீா் தேங்கியுள்ளது. விவசாயப் பயிா்களான பீன்ஸ், பீட்ரூட், கேரட், உருளை போன்ற செடிகள் அழுகி வருகின்றன.
இந்நிலையில் கொடைக்கானலில் வியாழக்கிழமை காலை முதல் மிதமான வெயில் நிலவியது. அதன் பின்னா் தொடா்ந்து மழை பெய்தது. இதனால் கொடைக்கானல்- வத்தலகுண்டு மலைச் சாலையான மயிலாடும்பாறை அருகே மரம் விழுந்தது.
இதனைத் தொடா்ந்து சம்பவ இடத்திற்கு கொடைக்கானல் வருவாய் கோட்டாட்சியா் சிவக்குமாா் மற்றும் வனத்துறை அதிகாரிகள் சென்று மரத்தை அகற்றினா். இதனால் சுமாா் 2 மணி நேரத்திற்கும் மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.