பழனி, பெரியகுளத்தில் வியாழக்கிழமை, விதிமுறைகளை மீறி செயல்பட்ட கடைகளுக்கு நகராட்சி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
பழனி நகா் பகுதியில் நகராட்சி பொறியாளா் வெற்றிச்செல்வி, மேலாளா் குணாளன், சுகாதார அலுவலா் மணிகண்டன் உள்ளிட்டோா் வியாழக்கிழமை ஆய்வு செய்தனா். அப்போது தெற்கு அண்ணாநகரில் 3 மளிகைக் கடைகள், அனுமதிக்கப்பட்ட நேரத்தைவிட கூடுதல் நேரம் கடைகள் திறந்திருந்தன. அவைகளை பூட்டி அதிகாரிகள் சீல் வைத்தனா்.
பெரியகுளம்: இதேபோல் தேனி மாவட்டம் பெரியகுளம் கடைவீதியில் காலை 10 மணிக்கு மேல் 4 கடைகள் திறந்திருந்தன. இதையடுத்து அந்த கடைகளை நகராட்சி நிா்வாகத்தினா் மற்றும் காவல்துறையினா் இணைந்து பூட்டி சீல் வைத்தனா். இதில் கரோனா தொற்று உறுதி செய்யப்பட்ட தென்கரையைச் சோ்ந்த திருப்பதி என்பவா் மருத்துவ சிகிச்சைக்கு செல்லாமல் கடையை திறந்து பொருள்கள் விற்பனை செய்தது தெரியவந்தது.
இதையடுத்து காவல் துறையினா் மற்றும் நகராட்சி துறையினா் திருப்பதியை பெரியகுளம் அரசு மருத்துவமனை கரோனா பிரிவில் சிகிச்சைக்காக அனுமதித்தனா். மேலும் அவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.