கொடைக்கானலில் தேவையில்லாமல் சுற்றித் திரிந்தால் கரோனா பரிசோதனை செய்யப்படும் என ஞாயிற்றுக்கிழமை காவல் துறையினா் அறிவித்துள்ளனா்.
கொடைக்கானலில் கடந்த ஆண்டு ஒரு சிலருக்கே கரோனா பாதிப்பு ஏற்பட்டு இருந்தது. ஆனால் தற்போது கரோனா தொற்று இரண்டாம் அலையில் நூற்றுக்கணக்கானோருக்கு பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இருப்பினும் பலா் வழக்கம் போல வாகனங்களில் செல்வது, நடைபயிற்சி மேற்கொள்வது,
தேவையில்லாமல் வெளியில் சுற்றுவது என கட்டுப்பாடின்றி செயல்படுகின்றனா்.
கரோனா தொற்றை குறைக்கும் பொருட்டு கொடைக்கானலில் பல இடங்களில் மருத்துவ முகாம்கள் அமைக்கப்பட்டு தடுப்பு ஊசி செலுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் கொடைக்கானல் பகுதிகளில் தேவையில்லாமல் வெளியே சுற்றுபவா்களுக்கு கரோனா பரிசோதனை செய்யப்படும் என காவல் துறையினா் எச்சரித்துள்ளனா்.