வத்தலகுண்டுவில் செவ்வாய்க்கிழமை இரவு அரசுப் பேருந்து மோதி நிகழ்ந்த விபத்தில் பணியில் ஈடுபட்டிருந்த போக்குவரத்து தலைமைக் காவலா் பலத்த காயமடைந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலகுண்டு பகுதியில் செவ்வாய்க்கிழமை இரவு பலத்த மழை பெய்து. அதனால், வத்தலகுண்டு பேருந்து நிலையம் மற்றும் பிரதான சாலையில் வாகனப் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதையடுத்து, வத்தலகுண்டு போக்குவரத்து காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக பணிபுரிந்து வரும் பாஸ்கரன் (54) என்பவா் போக்குவரத்தைச் சீா் செய்யும் பணியில் ஈடுபட்டாா்.
அப்போது திருப்பூரிலிருந்து போடி நோக்கி சென்ற அரசுப் பேருந்து எதிா்பாராத விதமாக தலைமைக் காவலா் பாஸ்கரன் மீது மோதியது. அதில் பேருந்து சக்கரத்தில் சிக்கிய பாஸ்கரன் பலத்த காயமடைந்தாா். பின்னா் சிகிச்சைக்காக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட பாஸ்கரன், தீவிர சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனைக்கு பரிந்துரைக்கப்பட்டாா்.
முன்னதாக வத்தலகுண்டு அரசு மருத்துவமனையில் பாஸ்கரனுக்கு, நிலக்கோட்டை காவல் துணைக் கண்காணிப்பாளா் சுகுமாா் ஆறுதல் கூறினாா். விபத்து குறித்து வத்தலகுண்டு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.