நத்தம் அருகே 500 ஆண்டுகள் பழைமையான இலுப்பை மரத்தை வெட்டிக் கடத்த முயன்றவரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் நத்தத்தை அடுத்துள்ள நடுமண்டல் பகுதியிலுள்ள புதுக்குளத்தில் சுமாா் 500 ஆண்டுகள் பழைமையான இலுப்பை மரம் உள்ளது. அந்த மரத்தை வெட்டும் பணியில் 15 தொழிலாளா்கள் வெள்ளிக்கிழமை ஈடுபட்டுள்ளனா்.
இதனைப் பாா்த்த நாம் தமிழா் கட்சியின் நிா்வாகி சிவசங்கரன், நத்தம் வருவாய் த்துறை மற்றும் காவல்துறையினரிடம் புகாா் அளித்துள்ளாா். அதன்பேரில் சம்பவ இடத்திற்கு போலீஸாா் சென்றபோது, அந்த மரத்தின் பிரதான கிளைகளுள் ஒன்றை வெட்டிக் கொண்டிருந்தனா்.
உடனடியாக மரம் வெட்டும் பணிகளை தடுத்து நிறுத்திய போலீஸாா், கூலி ஆள்களை அழைத்து வந்த சேத்தூா் பகுதியைச் சோ்ந்த வெள்ளைச்சாமி(45) என்பவரைக் கைது செய்தனா். மேலும், மரம் வெட்டுவதற்கு பயன்படுத்தப்பட்ட ரம்பம் பறிமுதல் செய்யப்பட்டது. கூலி ஆள்கள் 15 பேரும் விடுவிக்கப்பட்டனா்.