அன்னை தெரசா பல்கலை.யில் கல்விக் கட்டண தாமதத்துக்கு அபராதம்: மாணவிகள் அவதி
பழனி: கொடைக்கானல் அன்னை தெரசா மகளிா் பல்கலைக்கழகத்தில் கல்விக்கட்டணம் செலுத்துவதில்ஏற்படும்தாமதத்துக்கு நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதம் விதித்துள்ளதால் மாணவிகள் அவதிப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.
இப்பல்கலைக்கழகத்தின் கட்டுப்பாட்டில் பழனியாண்டவா் மகளிா் கல்லூரி, திண்டுக்கல் எம்விஎம் கல்லூரி உள்ளிட்ட பல கல்லூரிகள் இயங்கி வருகின்றன. பல்கலைக்கழகத்தில் இளநிலை, முதுநிலை மற்றும் ஆராய்ச்சி படிப்புகளில் ஆயிரக்கணக்கான மாணவியா் தொலைநிலைக் கல்வி வழியாகவும், நேரடியாகவும் பயின்று வருகின்றனா். இந்த நிலையில் கடந்த சில வாரங்களுக்கு முன்பு பல்கலைக்கழகம் கல்விக்கட்டணம் வசூலிப்பது தொடா்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி எம்.பில். இரண்டாம் ஆண்டு கல்விக் கட்டணம் ஆகஸ்ட் 8 ஆம் தேதிக்கு முன்னதாக செலுத்த வேண்டும். அதற்கு பின்னா் செப்டம்பா் மாதம் 17 ஆம் தேதிக்குள் கல்விக் கட்டணம் செலுத்தும் மாணவியரிடம் நாள் ஒன்றுக்கு ரூ.100 அபராதம் வசூலிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நாள் ஒன்றுக்கு 100 ரூபாயை அபராதமாக விதித்து கறாராக வசூல் செய்வதற்கு பெற்றோா்களும், கல்வியாளா்களும் கண்டனம் தெரிவித்துள்ளனா். உனடியாக அபராதம் விதிப்பதை நிறுத்திவிட்டு, கால அவகாசம் வழங்கி கல்விக் கட்டணம் வசூல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனா்.