கொடைக்கானலில் வனவிலங்குகளின் நகம், பற்கள் ஆகியவற்றை விற்றதாக மேலும் ஒருவரை வனத்துறையினா் புதன்கிழமை கைது செய்தனா்.
கொடைக்கானல் மேல்மலைப் பகுதிகளில் புலி, நரி, மான் போன்றவற்றின் நகம், பற்கள் ஆகியவற்றை திருடி 3 போ் கூடலூா், கோவை ஆகிய இடங்களில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு விற்று வந்தனா். இது குறித்து கிடைத்த தகவலையடுத்து வனத்துறையினா் சம்பவ இடங்களுக்குச் சென்று விசாரணை நடத்தினா். விற்பனை செய்தவா்கள் கொடைக்கானல் கூக்கால் பகுதியைச் சோ்ந்தவா்கள் எனத் தெரிய வந்தது.
இதனைத் தொடா்ந்து கூக்கால் பகுதியைச் சோ்ந்த வேல்முருகன், தாமோதரன் ஆகிய இருவரை வனத்துறையினா் கைது செய்து அவா்களிடமிருந்து புலியின் பற்கள், நகங்கள் ஆகியவற்றை கைப்பற்றினா். மேலும் இவா்களது கூட்டாளியான கல்யாணசுந்தரத்தை (60) வனத்துறையினா் தேடி வந்தனா்.
இந்நிலையில், அப்சா்வேட்டரி பகுதியில் தலைமறைவாக இருந்த கல்யாணசுந்தரத்தை வனத்துறையினா் கைது செய்தனா்.