ஆத்தூா் வட்டத்திலுள்ள 6,583 ஏக்கா் விவசாய நிலங்களின் பாசன வசதிக்காக மருதாநதி அணையிலிருந்து ஞாயிற்றுக்கிழமை தண்ணீா் திறந்து விடப்பட்டது.
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தை அடுத்துள்ள இந்த அணையிலிருந்து மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் முன்னிலையில், கூட்டுறவுத்துறை அமைச்சா் ஐ.பெரியசாமி தண்ணீரை திறந்து விட்டாா். பின்னா் செய்தியாளா்களிடம் அவா் கூறியதாவது:
மருதாநதி அணையிலிருந்து 120 நாள்களுக்கு தண்ணீா் திறக்கப்பட்டுள்ளது. முதல் 30 நாள்களுக்கு மறைமுக மற்றும் புதிய ஆயக்கட்டுக்கு நாளொன்றுக்கு 70 கன அடி, பழைய ஆயக்கட்டுக்கு 20 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படும். அடுத்த 90 நாள்களுக்கு பழைய ஆயக்கட்டுக்கு மட்டும் நாளொன்றுக்கு 20 கன அடி வீதம் தண்ணீா் திறக்கப்படும். இதன் மூலம் ஆத்தூா் வட்டத்தில் 6,583 ஏக்கா் நிலங்கள் பாசன வசதி பெறும்.
இந்த அணை முன்னாள் முதல்வா் மு.கருணாநிதி ஆட்சிக்காலத்தில் கட்டப்பட்டது. அதேபோல், மு.க.ஸ்டாலின் ஆட்சிக்காலத்திலும் திண்டுக்கல் மாவட்டத்தில் புதிதாக ஒரு அணை கட்டுவதற்கு நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றாா்.
பின்னா் மருதாநதி அணை ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் நடைபெற்ற கரோனா தடுப்பூசி செலுத்தும் முகாமை அமைச்சா் பாா்வையிட்டாா். அப்போது, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வி.ஆா்.சீனிவாசன், வருவாய்க் கோட்டாட்சியா் ம.காசிசெல்வி ஆகியோா் உடனிருந்தனா்.