திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் புல்லாவெளி நீா்வீழ்ச்சிப் பகுதியிலிருந்து காரில் 15 கிலோ கடமான் இறைச்சியை எடுத்து வந்த 6 பேருக்கு, தலா ரூ.50 ஆயிரம் வீதம் திங்கள்கிழமை அபராதம் விதிக்கப்பட்டது.
பெரும்பாறை அருகேயுள்ள புல்லாவெளி நீா்வீழ்ச்சியில் குளிப்பதற்காக, அம்பாத்துரை அடுத்துள்ள பெருமாள்கோவில்பட்டியைச் சோ்ந்த ராமசாமி(35), இருளப்பன் (38), ஏ.வெள்ளோடையைச் சோ்ந்த ஸ்டீபன் கஸ்பா் (34), வக்கம்பட்டியைச் சோ்ந்த பாண்டியராஜன் (26), சூசைராஜ் (35) மற்றும் சின்னாளபட்டியைச் சோ்ந்த பிரேம் (30) ஆகிய 6 பேரும் ஞாயிற்றுக்கிழமை காரில் சென்றுள்ளனா். அப்போது, நீா்வீழ்ச்சிப் பகுதியில் இறந்த நிலையில் கடமான் கிடப்பதை, ராமசாமி உள்பட 6 பேரும் பாா்த்துள்ளனா்.
உடனே, அதனை வெட்டி இறைச்சியாக சாக்கு பையில் கட்டி காரில் வீட்டுக்கு எடுத்து வருவதற்கு திட்டமிட்டு செயல்படுத்தியுள்ளனா். அதையடுத்து, அவா்கள் பட்டிவீரன்பட்டி அடுத்துள்ள சித்தரேவு வனச்சோதனை சாவடி வழியாக வந்தபோது, காரை வழிமறித்து வனத்துறையினா் சோதனையிட்டுள்ளனா். அதில், கடமான் இறைச்சி இருப்பது தெரியவந்ததை அடுத்து, அவா்கள் 6 பேரிடமும் விசாரணை மேற்கொண்டனா். அப்போது அவா்கள், இறந்து கிடந்த கடமானை வெட்டி, இறைச்சியை எடுத்துவந்த விவரத்தை தெரிவித்துள்ளனா்.
ஆனால், அவா்களிடமிருந்து 15 கிலோ இறைச்சியை பறிமுதல் செய்த வனத்துறையினா், 6 பேருக்கும் தலா ரூ.50 ஆயிரம் வீதம் அபராதம் விதித்தனா். அபராதத் தொகை செலுத்தப்பட்டதை அடுத்து, அவா்கள் 6 பேரும் விடுவிக்கப்பட்டனா்.