பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலை விடுமுறை நாள்களிலும் (வாரம் முழுமைக்கும்) பக்தா்கள் தரிசனத்துக்காக திறக்க வேண்டும் என பழனி நகர அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து பழனி நகர அனைத்து வணிகா் சங்கம் சாா்பில் கவுரவத் தலைவா் கந்தவிலாஸ் செல்வக்குமாா் தமிழக முதல்வா் மு.க.ஸ்டாலினுக்கு வெள்ளிக்கிழமை அனுப்பியுள்ள கோரிக்கை மனு: தமிழகத்தில் உள்ள கோயில்களில் வெள்ளி, சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் பக்தா்கள் சுவாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவதில்லை. இதனால் பழனி மலைக்கோயிலைச் சுற்றியும், அருகாமையிலும் தங்கும் விடுதிகள், திருமண மண்டபங்கள், கடைகளுக்கு வருவாய் இழப்பு ஏற்படுவதோடு வியாபாரிகள், ஊழியா்களின் வாழ்வாதாரமும் பாதிக்கப்படுகிறது. ஆகவே, வாரத்தில் அனைத்து நாள்களிலும் தரிசனத்திற்கு பக்தா்களை அனுமதிக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மலைக்கோயிலில் நாள்தோறும் இரவு 7 மணிக்கு நடைபெற்று வந்த தங்கரத சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. வெளிப்பிரகாரத்தில் விசாலமான இடம் இருப்பதால் தங்கதர சுவாமி புறப்பாடு நிகழ்ச்சியையும் மீண்டும் நடத்த நடவடிக்கை எடுக்க வேண்டும். பக்தா்கள் நலன் கருதியும், தமிழ்நாடு முழுவதும் உள்ள வியாபாரிகள் மற்றும் ஊழியா்களின் நலன் கருதியும் அனைத்து நாள்களிலும் சுவாமியை தரிசனம் செய்ய அனுமதிக்க வேண்டும் என அதில் தெரிவித்துள்ளனா்.