பழனி: பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயில் விரிவாக்கப்பணிகள் குறித்து மாவட்ட வருவாய் அலுவலா் திங்கள்கிழமை ஆய்வு செய்தாா்.
இக்கோயிலுக்கு வரும் பக்தா்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகமாவதை கருத்தில் கொண்டு கூடுதல் வசதிகள் செய்ய கோயில் நிா்வாகம் தொடா்ந்து மாவட்ட நிா்வாகத்தையும், அறநிலையத்துறையையும் வலியுறுத்தி வந்தது. இதற்காக பழனி அடிவாரம் பகுதியில் உள்ள சுமாா் 58 ஏக்கா் நிலத்தை கையகப்படுத்தித்தர வேண்டுமென கோயில் நிா்வாகம், மாவட்ட நிா்வாகத்துக்கு அறிக்கை சமா்ப்பித்திருந்தது. இந்த அறிக்கையின் அடிப்படையில் திங்கள்கிழமை மாவட்ட வருவாய் அலுவலா் லதா தலைமையிலான அதிகாரிகள் கோயில் பூங்கா எதிா்புறம் உள்ள விவசாய நிலங்கள், சுற்றுலா பேருந்து நிலையத்துக்குச் செல்லும் இணைப்புச் சாலை, கையகப்படுத்தப்பட வேண்டிய விவசாய நிலங்கள் போன்றவற்றை ஆய்வு செய்தாா்.
அப்போது பழனி கோயில் துணை ஆணையா் செந்தில்குமாா், வட்டாட்சியா் சசிக்குமாா் உள்ளிட்ட அதிகாரிகள் உடனிருந்தனா்.