இளம் மருத்துவா்கள் நோ்மையாகவும், பாரபட்சமின்றியும் சேவையாற்ற முன் வர வேண்டும் என ஆட்சியா் ச.விசாகன் தெரிவித்தாா்.
திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில், மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவிக்கும் நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது. இந்நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சியா் ச.விசாகன் தலைமை வகித்தாா்.
அரசு மருத்துவக் கல்லூரி முதன்மையா் கே.கே.விஜயகுமாா் முன்னிலை வகித்தாா்.
மாணவா்களுக்கு வெள்ளை அங்கி அணிவித்து ஆட்சியா் விசாகன் பேசியது: உயிா் காக்கும் மருத்துவப் பணியில் ஈடுபடவுள்ள இளம் மாணவா்கள், இந்த சேவையை தூய்மையாகவும், நோ்மையாகவும், பாரபட்சமின்றியும் நிறைவேற்ற உறுதி ஏற்க வேண்டும். அதனை வெளிப்படுத்தும் வகையிலேயே, வெள்ளை அங்கி அணிவிக்கும் வழக்கம் பின்பற்றப்படுகிறது என்றாா்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவக் கல்லூரி துணை முதல்வா் சலீம், கண்காணிப்பாளா் வீரமணி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.