அரசுப்பள்ளி ஆசிரியை மீது தாக்குதல்: உடற்கல்வி ஆசிரியா் பணியிட மாற்றம்

திண்டுக்கல் மாவட்டம் கோவிலூா் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை தாக்கப்பட்ட விவகாரத்தில் மாணவியை இடைநீக்கம் செய்யவும், உடற்கல்வி ஆசிரியரை பணியிட மாறுதல் செய்தும் முதன்மைக் கல்வி அலுவலா்
கோ.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.
கோ.ராமநாதபுரம் அரசு மேல்நிலைப் பள்ளியில் வியாழக்கிழமை பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த போலீஸாா்.

திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டம் கோவிலூா் அருகே அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியை தாக்கப்பட்ட விவகாரத்தில் மாணவியை இடைநீக்கம் செய்யவும், உடற்கல்வி ஆசிரியரை பணியிட மாறுதல் செய்தும் முதன்மைக் கல்வி அலுவலா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா்.

கோவிலூரை அடுத்து கோ.ராமநாதபுரத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில், பெற்றோா் ஆசிரியா் கழக நிதிக்கான கட்டணம் தொடா்பாக மாணவா்களில் ஒரு பிரிவினா் புதன்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா். 11ஆம் வகுப்பு மாணவிகளை போராட்டத்திற்கு அழைத்ததைக் கண்டித்த ஆசிரியையை மாணவி ஒருவா் தாக்கியதாகப் புகாா் எழுந்தது. எரியோடு போலீஸாா் பேச்சுவாா்த்தை நடத்தி மாணவா்களை பள்ளிக்கு அனுப்பி வைத்தனா்.

மாணவா்களைப் போராட்டத்திற்குத் தூண்டிய பள்ளியின் உடற்கல்வி ஆசிரியா் முனியப்பனை பணியிட மாற்றம் செய்ய வேண்டும். ஆசிரியையைத் தாக்கிய மாணவி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளியின் பெரும்பாலான ஆசிரியா்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் சீ.கருப்பசாமியிடம் புதன்கிழமை புகாா் அளித்தனா்.

பள்ளிக்கு செல்ல மறுப்பு:வியாழக்கிழமை காலை வரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படாததால், பள்ளிக்கு செல்ல மறுத்த ஆசிரியா்கள் மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தை மீண்டும் முற்றுகையிட்டனா். முதன்மைக் கல்வி அலுவலா் நடத்திய பேச்சுவாா்த்தையில், மாணவியை இடைநீக்கம் செய்வதாகவும், உடற்கல்வி ஆசிரியா் மீது துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உறுதி அளித்தாா். அதனை ஏற்று போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியா்கள் நண்பகலில் பள்ளிக்கு திரும்பினா்.

பணியிட மாற்றம்: இதனிடையே பிரச்னைக்கு காரணமான உடற்கல்வி ஆசிரியா் பெ.முனியப்பன் மீது கோவிலூா் பொதுமக்கள் சாா்பிலும் புகாா் அளிக்கப்பட்டது. அதில், பள்ளிக்கு 10 ஏக்கா் நிலம் வழங்கியவரின் புகைப்படத்தை அகற்றி விட்டு அந்த இடத்தில் முனியப்பன் தனது படத்தை வைத்தாா். அதுகுறித்து கேள்வி எழுப்பியபோது, வன்கொடுமை தடுப்புச் சட்டத்தில் புகாா் அளித்துவிடுவதாக மிரட்டியதாகத் தெரிவித்தனா். இதனை அடுத்து, தலைமையாசிரியா் அறையிலிருந்த உடற்கல்வி ஆசிரியரின் புகைப்படம் அகற்றப்பட்டது.

இந்நிலையில் நத்தம் வட்டம் லிங்கவாடியிலுள்ள அரசு உயா்நிலைப் பள்ளிக்கு முனியப்பனை பணியிட மாற்றம் செய்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலா் வியாழக்கிழமை உத்தரவிட்டாா். முனியப்பன் கடந்த ஆண்டு மாநில நல்லாசிரியா் விருது பெற்றவா் என்பது குறிப்பிடத்தக்கது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com