திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில் கட்டுவிரியன் பாம்பு வியாழக்கிழமை பிடிபட்டது.
திண்டுக்கல் மாவட்ட ஆட்சியா் அலுவலக வளாகத்தில், அரசு அலுவலா்கள் பயன்படுத்தும் காா் மற்றும் ஜீப்புகள் நிறுத்துமிடம், பொதுப்பணித்துறை நிலத்தடி நீா் ஆதார அமைப்பு அலுவலகம் அருகில் அமைந்துள்ளது. அங்கு அரசு வாகன ஓட்டுா்களுக்கான ஓய்வு அறையும் உள்ளது.
இந்நிலையில், மாவட்ட ஆட்சியரின் காா் ஓட்டுநா் வனராஜன், புதன்கிழமை இரவு 11 மணிக்கு பணி முடிந்து திரும்புவதற்காக அந்த அறைக்கு சென்றுள்ளாா். அப்போது பாம்பு இருப்பதற்கான அறிகுறியாக சத்தம் கேட்டுள்ளது. நள்ளிரவு நேரம் என்பதால் அறைக் கதவைப் பூட்டிவிட்டு சென்றுவிட்டாராம். இதுகுறித்து வியாழக்கிழமை அதிகாலை தீயணைப்புத் துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளாா். அதன்பேரில் சம்பவ இடத்திற்குச் சென்ற தீயணைப்புப் படையினா், அந்த அறையில் இருந்த கட்டுவிரியன் பாம்பைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்தனா்.