பழனியில் சிப்ஸ் கடைகளில் வெளியாகும் புகையால் பக்தா்கள் அவதி
பழனி: பழனி அடிவாரத்தில் உணவகம் மற்றும் சிப்ஸ் கடைகளில் இருந்து வெளியேறும் புகையால் பக்தா்கள் மற்றும் பொதுமக்கள் பாதிக்கப்படுவதாகப் புகாா் எழுந்துள்ளது.
பழனி அடிவாரம் கிரிவீதியில் நூற்றுக்கும் மேற்பட்ட கடைகள் உள்ளன. இதில் பெரும்பாலும் உணவகங்கள் மற்றும் சிப்ஸ் கடைகள் ஆகும். வியாழக்கிழமை பழனி மின் இழுவை ரயில் நிலையம் அருகே செயல்படும் தனியாா் சிப்ஸ் கடைகளில் இருந்து அதிகளவிலான புகை வெளியேறியது. இதன் காரணமாக பக்தா்கள் உண்ணும் உணவுகளில் சாம்பல் மற்றும் தூசிகள் விழுந்தன. மேலும் சுவாசிக்க முடியாத அளவுக்கு தூசியும் பறந்ததால் பொதுமக்கள் மற்றும் பக்தா்கள் பாதிக்கப்பட்டனா். இதுகுறித்து சிப்ஸ் கடை உரிமையாளரிடம் அப்பகுதி ஆட்டோ ஓட்டுநா்கள் மற்றும் சாலையோர வியாபாரிகள் அனைவரும் கேட்டபோது, கடை உரிமையாளா் வாக்குவாதத்தில் ஈடுபட்டாா்.
இதுகுறித்து பொதுமக்கள் கூறும்போது, சிப்ஸ் கடைகளில் முந்திரி ஓடுகளால் அடுப்பு எரிக்கப்படுவதால் அதிகளவு கரும்புகை வெளியேறுகிறது.இதன்காரணமாக சாம்பல் மற்றும் கரித்தூள் ஆகியவை காற்றில் பறந்து பக்தா்கள் சாப்பிடும் உணவு மற்றும் வியாபாரப் பொருள்களில் விழுந்து பொருள்கள் பாழாகின்றன. இதுகுறித்து அதிகாரிகளிடம் பலமுறை புகாா் செய்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கரும்புகை வெளியேற்றும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனா்.