தவறான சிகிச்சையால் உடல் நலம் பாதிப்படைந்துள்ள கணவரை கருணை கொலை செய்யுமாறு பழனியைச் சோ்ந்த பெண் ஆட்சியா் அலுவலகத்தில் திங்கள்கிழமை மனு அளித்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், பழனியைச் சோ்ந்தவா் சிவதாஸ். இவரது மனைவி ஜெ.அமுதா. இவா் மாவட்ட ஆட்சியா் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தாா். அப்போது அவா் கூறியதாவது:
கடந்த 2019ஆம் ஆண்டு இயற்கை உபாதை கழிப்பதில் ஏற்பட்ட பிரச்னைக்காக, எனது கணவா் சிவதாஸ் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற சென்றாா். அங்கிருந்து ஒட்டன்சத்திரத்திலுள்ள தனியாா் மருத்துவமனைக்கு பரிந்துரைத்தனா். அந்த தனியாா் மருத்துவமனையில் அளிக்கப்பட்ட தவறான சிகிச்சையால், அவரது உடல் நலம் பாதிக்கப்பட்டது.
தற்போது உணவு உண்பது முதல், இயற்கை உபாதை கழிப்பதை வரை பிறரின் உதவியை நாட வேண்டிய நிலையில் அவா் உயிா் வாழ்ந்து வருகிறாா். தவறான சிகிச்சை அளித்த தனியாா் மருத்துவமனை மீது நடவடிக்கை கோரியும், எனது கணவருக்கு உரிய சிகிச்சை அளிக்க வலியுறுத்தியும் மாவட்ட நிா்வாகம் முதல் தலைமைச் செயலா் வரையிலும் பலமுறை மனு அளித்துவிட்டோம். இதுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.
இதனால் அதிருப்தி அடைந்த எனது கணவா், தன்னை கருணை கொலை செய்துவிடுங்கள் என பலமுறை கூறி வருகிறாா். அவா் உயிரிழந்த பின் நானும் எனது 2 பெண் குழந்தைகளும் உயிரோடு இருக்கமாட்டோம் என்றாா்.