அரசுப் பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டத்தின் கீழ் திண்டுக்கல் மற்றும் கொடைக்கானலில் 48 பள்ளிகளில் முதல் கட்டமாக தொடங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
தமிழகத்தில் அரசுத் தொடக்கப் பள்ளி மாணவா்களுக்கு காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. முதல்கட்டமாக குறிப்பிட்ட சில பள்ளிகளில் மட்டும் இத்திட்டத்தை தொடங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. அந்த வகையில், திண்டுக்கல் மாவட்டத்தில் 48 அரசுத் தொடக்கப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி வழங்கும் திட்டம் தொடங்கப்படவுள்ளது.
இதுதொடா்பாக கல்வித்துறை அதிகாரிகள் கூறியதாவது: திண்டுக்கல் மாவட்டத்தைப் பொருத்தவரை, மாநகராட்சி மற்றும் மலைப் பகுதியிலுள்ள பள்ளிகள் பிரிவின் கீழ் காலை சிற்றுண்டித் திட்டத்திற்கு 48 பள்ளிகள் தோ்வு செய்யப்பட்டுள்ளன. திண்டுக்கல் மாநகராட்சியில் 14 தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 1,223 மாணவா்கள், கொடைக்கானல் பகுதியில் 34 தொடக்கப் பள்ளிகளைச் சோ்ந்த 1,105 மாணவா்கள் என 2,328 மாணவா்கள் இத்திட்டத்தின் கீழ் பயன்பெறவுள்ளனா். இந்த திட்டங்களை மாநகராட்சிப் பள்ளிகளில் நகராட்சி நிா்வாக இயக்குநரகமும், மலைப் பகுதிப் பள்ளிகளில் தமிழ்நாடு மகளிா் மேம்பாட்டுத் துறை இயக்குநரகமும் செயல்படுத்தும் என தெரிவித்தனா்.