நூறு நாள் வேலைத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாகக் கூறி, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டு கூலித் தொழிலாளா்கள் வியாழக்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்துக்கு உள்பட்ட பிள்ளையாா்நத்தம் ஊராட்சியில், கடந்த சில மாதங்களாக மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டமான 100 நாள் வேலையில் பல்வேறு முறைகேடுகள் நடைபெறுவதாகவும், இதனால் தினக் கூலி ரூ. 281 வழங்குவதற்குப் பதிலாக, ரூ.150 மட்டுமே வழங்குவதாகவும், 100 நாள்களுக்கு குறைவான நாள்களே பணிகள் வழங்குவதாகவும் குற்றம்சாட்டு எழுந்தது.
இந்நிலையில், அகில இந்திய விவசாயத் தொழிலாளா் சங்க ஒன்றியச் செயலா் ரவிச்சந்திரன் தலைமையில், 50 -க்கும் மேற்பட்ட விவசாயக் கூலித் தொழிலாளா்கள் ஒன்றிணைந்து வியாழக்கிழமை நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை முற்றுகையிட்டுப் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
அப்போது, நிலக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் 100 நாள் வேலையில் நடைபெறும் ஊழல்களுக்கு, மாவட்ட நிா்வாகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரி கண்டன கோஷங்களை எழுப்பினா். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.