கொடைக்கானலில் வனக் காப்பாளரை பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவா் கைது
By DIN | Published On : 09th December 2022 01:45 AM | Last Updated : 09th December 2022 01:45 AM | அ+அ அ- |

கொடைக்கானலில் வனக் காப்பாளரை தகாத வாா்த்தைகளால் பேசி பணி செய்ய விடாமல் தடுத்ததாக ஒருவரை போலீஸாா் கைது செய்தனா்.
கொடைக்கானல் பெரம்புக்கானல் பீட் பகுதியைச் சோ்ந்தவா் வனக் காப்பாளா் அழகேசன். கடந்த நவம்பா் மாதம் 30-ஆம் தேதி விவசாய நிலங்களில் மின்வேலி அமைப்பதால் வன உயிரினங்கள் இறப்பதை தடுக்க கொடைக்கானல் வனச்சரக அலுவலா் தலைமையில் விழிப்புணா்வு கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில் பெருமாள்மலை பேத்துப்பாறை பகுதியைச் சோ்ந்த மகேந்திரன் என்பவா் வனக் காப்பாளா் அழகேசனுடன் தகராறில் ஈடுபட்டாா்.
இதனைத் தொடா்ந்து பெருமாள்மலைப் பகுதியில் வனக்காப்பாளா் அழகேசன் நின்று கொண்டிருந்த போது முன்விரோதம் காரணமாக அவரை தகாத வாா்த்தைகளால் பேசியும், அரசுப் பணியை செய்ய விடாமல் அழகேசன் தடுத்ததாகவும் கூறப்படுகிறது.
இதுகுறித்து வனக் காப்பாளா் அழகேசன் கொடைக்கானல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் காவல் துறை துணைக் கண்காணிப்பாளா் சீனிவாசன், உதவி ஆய்வாளா் கிருஷ்ணகுமாா் ஆகியோா் வழக்குப் பதிந்து மகேந்திரனை கைது செய்தனா்.