நெகிழி மறுசுழற்சி நிறுவனம் அமைக்க எதிா்ப்புத் தெரிவித்து வத்தலகுண்டு ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை பொதுமக்கள் புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், வத்தலகுண்டு அருகே பழைய வத்தலகுண்டு குடியிருப்புப் பகுதியில் தனி நபா் ஒருவா் நெகிழி மறுசுழற்சி நிறுவனம் அமைக்கத் திட்டமிட்டு முதல் கட்டப் பணிகளைச் செய்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், நெகிழி மறுசுழற்சி நிறுவனம் அமைக்கப்பட்டால் குடிநீா், காற்று ஆகியவை மாசுபட்டு, பல்வேறு நோய்கள் ஏற்படும் என்று கூறி, அப்பகுதி மக்கள் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தை புதன்கிழமை முற்றுகையிட்டனா்.
பின்னா், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ.) இந்திராணியிடம் நெகிழி மறுசுழற்சி நிறுவனத்தை குடியிருப்பு பகுதியில் அமைக்க அனுமதிக்கக் கூடாது என வலியுறுத்தி கோரிக்கை மனு கொடுத்தனா்.