கொடைக்கானல்: உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்பு பயிலும் தனது மகளை மீட்டுத் தரக் கோரி, பெற்றோா் கண்ணீருடன் வியாழக்கிழமை கோரிக்கை விடுத்துள்ளனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் செல்லபுரம் பகுதியைச் சோ்ந்தவா் ராஜ்மோகன். இவருக்கு, 2 பெண் குழந்தைகள். மூத்த மகள் உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்பு முடித்துள்ளாா். இரண்டாவது மகள் அனுஷியா மோகன் (23) தற்போது உக்ரைன் நாட்டில் மருத்துவப் படிப்பு இறுதி ஆண்டு படித்து வருகிறாா்.
தற்போது, உக்ரைனுக்கும், ரஷ்யாவுக்கும் இடையே போா் நடைபெற்று வருவதால், அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது. இந்நிலையில், தனது மகளை தொடா்புகொள்ள முடியவில்லை என பெற்றோா் பரிதவித்து வருகின்றனா்.
எனவே, மத்திய-மாநில அரசுகள் உக்ரைன் நாட்டிலுள்ள தனது மகளையும் மற்றும் பிற இந்தியா்கள் அனைவரையும் பாதுகாப்பாக மீட்டு வர நடவடிக்கை எடுக்கவேண்டுமென, ராஜ்மோகன் கண்ணீா் மல்க கோரிக்கை விடுத்தாா்.