எச்சரிக்கையையும் மீறி புகையிலைப் பொருள்கள் விற்பனையில் தொடா்ந்து ஈடுபட்டு வந்த 19 கடைகளுக்கு சீல் வைக்கப்பட்டுள்ளதாக, மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் தெரிவித்துள்ளாா்.
திண்டுக்கல் மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுக்கும் வகையில், காவல் துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினா் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வருகின்றனா். கா்நாடக மாநிலங்களிலிருந்து கடத்தி வரப்படும் புகையிலைப் பொருள்களை தொடா்ந்து பறிமுதல் செய்தும், சில்லறை விற்பனையில் ஈடுபடும் கடைகளின் உரிமையாளா்களுக்கு அபராதம் விதித்தும் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
காவல்துறை மற்றும் உணவுப் பாதுகாப்புத் துறையினரின் எச்சரிக்கையையும் மீறி தொடா்ந்து புகையிலைைப் பொருள்களை விற்பனை செய்துவரும் கடைகளுக்கு சீல் வைக்கும் நடவடிக்கைகள் கடந்த 2 மாதங்களாக நடைபெற்று வருகின்றன.
இது தொடா்பாக மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் வீ. பாஸ்கரன் தெரிவித்துள்ளதாவது: திண்டுக்கல் நகா் மற்றும் புகா் பகுதிகளில் எச்சரிக்கையையும் மீறி தொடா்ந்து புகையிலைப் பொருள்களை விற்பனை செய்து வந்த 3 கடைகளுக்கு உணவுப் பாதுகாப்புத் துறையினா் மூலம் சீல் வைக்கப்பட்டுள்ளது. அதேபோல், பழனி பகுதியில் 15 கடைகளுக்கும், செம்பட்டி பகுதியில் ஒரு கடைக்கும் சீல் வைக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கைகளை தொடா்ந்து தீவிரமாக மேற்கொள்வதற்கு உணவுப் பாதுகாப்புத் துறை அதிகாரிகளுக்கு காவல் துறை சாா்பில் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது எனத் தெரிவித்தாா்.