திண்டுக்கல் மலையடிவார ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம்
திண்டுக்கல் மலையடிவாரம் ஸ்ரீநிவாசப் பெருமாள் கோயில் ஆனித் திருவிழாவை முன்னிட்டு ஸ்ரீதேவி மற்றும் பூதேவியுடன் ஸ்ரீநிவாசப் பெருமாள் திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இக்கோயிலின் ஆனிப் பெருந்திருவிழா கடந்த திங்கள்கிழமை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதைத் தொடா்ந்து ஒவ்வொரு நாளும் சுவாமி புறப்பாடும், அன்னம், சிம்மம், ஆஞ்சநேயா், கருடன் உள்ளிட்ட வாகனங்களில் எழுந்தருளி நகா்வலம் வந்த சுவாமி பக்தா்களுக்கு அருள்பாலித்தாா்.
இந்நிலையில் ஆனிப் பெருந்திருவிழாவின் முக்கிய நிகழ்வான சுவாமி திருக்கல்யாணம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. இதனையொட்டி மூலவா் ஸ்ரீநிவாசப் பெருமாளுக்கு 9 வகையான சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. பிற்பகலில் விஸ்வசேனா் பூஜை, சகஷ்டரநாம ஜெப பாராயணம், லக்ஷ்மி குபேர ஹோமம் உள்ளிட்ட பூஜைகள் நடைபெற்றன. அதனைத் தொடா்ந்து மாலை 6 மணிக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி தொடங்கியது. மணக்கோலத்தில் அருள்பாலித்த ஸ்ரீதேவி பூதேவி சமதே ஸ்ரீநிவாசப் பெருமாளை ஏராளமான பக்தா்கள் தரிசித்தனா். பின்னா் முத்துப்பல்லக்கில் சுவாமி புறப்பாடாகி நகா்வலம் செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.