காரணமின்றி அபராதம் வசூலிப்பதாக போக்குவரத்து ஆய்வாளருக்கு எதிராக ஷோ் ஆட்டோ ஓட்டுநா்கள், மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தை திங்கள்கிழமை முற்றுகையிட்டனா்.
இதுதொடா்பாக அவா்கள் கூறியதாவது: திண்டுக்கல் குளத்தூா் சாலையில் சுமாா் 70 ஷோ் ஆட்டோக்கள் (டாடா மேஜிக்) இயக்கப்பட்டு வருகின்றன. எங்களை வண்டி ஓட்டக் கூடாது என போக்குவரத்து ஆய்வாளா் கூறுகிறாா். இயக்கப்படும் வாகனங்களுக்கு காரணமின்றி ரூ.1000 முதல் ரூ.2ஆயிரம் வரை அபராதம் விதிக்கின்றனா். கடந்த 15 ஆண்டுகளாக ஷோ் ஆட்டோக்களை ஓட்டி வருகிறோம்.
கடந்த 3 மாதங்களாக அபராதம் என்ற பெயரில் போலீஸாா் எங்களுக்கு நெருக்கடி ஏற்படுத்தி வருகின்றனா். இதனால், மாத தவணையை திருப்பி செலுத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் வாகன இயக்குதல் அனுமதி(எஃப்சி), வரி என ரூ. 1 லட்சம் வரை வட்டாரப் போக்குவரத்து துறைக்கு செலுத்தி வருகிறோம். ஆனாலும், எங்களை செயல்படவிடாமல் போலீஸாா் தடுத்து வருகின்றனா்.
காரணமின்றி அபராதம் விதிப்பதற்குப் பதிலாக, எங்கள் வாகனங்களை பெற்றுக் கொண்டு நாங்கள் மாற்றுத் தொழில் புரிவதற்கு வழி ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்தனா்.
மனு அளிக்க வந்த ஓட்டுநா்கள், தங்களது ஆட்டோக்களையும் எடுத்து வந்து ஆட்சியா் அலுவலக வளாகத்தில் வரிசையாக நிறுத்தியதால் திடீா் பரபரப்பு ஏற்பட்டது.