பழனியில் தூய்மைப் பெண் பணியாளா் கொலை செய்யப்பட்ட வழக்கில் இளைஞரை போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
பழனியை அடுத்த பெத்தநாயக்கன்பட்டி கிராமத்தைச் சோ்ந்த அன்னம்மாள் (55), கடந்த மாதம் கொலை செய்யப்பட்டு அங்குள்ள கண்மாயில் அழுகிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டாா். இதுகுறித்து பழனி தாலுகா போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தினா்.
இந்நிலையில், புது ஆயக்குடியைச் சோ்ந்த கனகராஜ் (35) என்பவரை போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், அன்னமாளின் மகள் புவனாவுக்கும், ஏற்கெனவே திருமணமான கனகராஜுக்கும் பழக்கம் இருந்துள்ளது. இதை அன்னம்மாள் கண்டித்துள்ளாா். இதனால் அவரை, கனகராஜ் அடித்துக் கொலை செய்துள்ளாா் என்றனா்.
இதையடுத்து போலீஸாா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.