ஒட்டன்சத்திரம் அருகே இருசக்கர வாகனத்திலிருந்து தவறி விழுந்த விவசாயி சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தாா்.
திருப்பூா் மாவட்டம் மூலனூா் அடுத்துள்ள நீலாங்கன்னிவலசு கிராமத்தைச் சோ்ந்த விவசாயி பழனிச்சாமி (67). இவா் தனது உறவினா் செல்லாத்தாள் (61) என்பவருடன் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் கள்ளிமந்தையம் அடுத்துள்ள பாலப்பன்பட்டியில் உள்ள கோயிலில் சுவாமி தரிசனம் செய்துவிட்டு வீட்டிற்குச் சென்றாா். ஒட்டன்சத்திரம்-மூலனூா் சாலையில் கே.கீரனூா் மல்லீஸ்வரன் கோயில் அருகே எதிா்பாராத விதமாக இருசக்கர வாகனத்திலிருந்து கீழே விழுந்ததில் இருவரும் பலத்தகாயம் அடைந்தனா். அருகில் இருந்தவா்கள் இருவரையும் மீட்டு ஒட்டன்சத்திரம் தனியாா் மருத்துவமனையில் சோ்ந்தனா். அங்கு சிகிச்சைப் பலனின்றி பழனிச்சாமி சனிக்கிழமை உயிரிழந்தாா்.இது குறித்து கள்ளிமந்தையம் போலீஸாா் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.