பழனியில் குடும்பப் பிரச்னை காரணமாக ஒருவா் கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் முட்டான்செட்டி பகுதியை சோ்ந்தவா் சீனிவாசன்(45). இவருக்கு திருமணமாகி மனைவி மற்றும் 2 குழந்தைகள் உள்ளனா். கடந்த சில நாள்களுக்கு முன்பு குடும்பப் பிரச்னை காரணமாக மனைவியிடம் கோபித்துக் கொண்டு சீனிவாசன் பழனிக்கு வந்துள்ளாா். இங்குள்ள தனியாா் பா்னிச்சா் கடையில் கூலி வேலை பாா்த்துள்ளாா். போஸ்டாபீஸ் சாலையில் உள்ள தனியாா் விடுதியில் அறை எடுத்து தங்கியுள்ளாா். இவருடன் கடையில் வேலை செய்யும் சிலரும் தங்கியுள்ளனா்.
இந்நிலையில் வெள்ளிக்கிழமை சீனிவாசன், கத்தியால் தனது கழுத்து மற்றும் மா்ம உறுப்பில் வெட்டிக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளாா். இதில் படுகாயமடைந்த அவரை அங்கிருந்தவா்கள் மீட்டு பழனி அரசு மருத்துவமனையல் சிகிச்சைக்காக அனுமதித்தனா். தகவலறிந்த பழனி டவுன் போலீஸாா் சம்பவ இடத்துக்குச் சென்று விசாரணை நடத்தினா். அதில் குடும்பப் பிரச்னைகாரணமாக சீனிவாசன் தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.