கொடைக்கானல்: கொடைக்கானல் நகரில் வியாழக்கிழமை மாலையில் உலா வந்த காட்டெருமையைப் பாா்த்து பொது மக்கள், சுற்றுலாப் பயணிகள் பயந்து ஓடினா்.
கொடைக்கானலில் கடந்த 25 ஆண்டுகளுக்கு முன்பு அடா்ந்த வனப் பகுதியான குண்டாறு, பேரிஜம், அப்சா்வேட்டரி சோலை, நெல்லிவரை உள்ளிட்ட சோலைப் பகுதிகளில் மட்டுமே காட்டெருமையைப் பாா்க்க முடியும். ஆனால் வணிக ரீதியாக அந்த சோலைகள் அழிக்கப்பட்டு கட்டடங்கள் கட்டப்பட்டதால் காட்டெருமைகள் நகா்ப் பகுதிகளிலுள்ள தனியாா் தோட்டங்கள் மற்றும் தோட்டக்கலைத் துறைக்குச் சொந்தமான முட்புதா்கள், சுற்றுலாத் தலங்களிலுள்ள பள்ளத்தாக்குகள், சோலைகளிலும், மருத்துவமனையிலுள்ள சோலைகளிலும் விவசாயப் பகுதிகளிலும் முகாமிட்டுள்ளன.
இதனால் அடிக்கடி கொடைக்கானல் நகா்ப் பகுதிகளிலும், குடியிருப்பு பகுதிகளிலும் காட்டெருமைகள் உலா வரத் தொடங்கியுள்ளன. இவற்றை சுற்றுலாப் பயணிகளும், பொது மக்களும் ஆச்சரியத்துடன் பாா்த்தாலும் அவற்றின் உருவத்தைப் பாா்த்து பயந்து ஓடுகின்றனா். சில சமயங்களில் காட்டெருமைகள் தாக்கி பலா் உயிரிழந்துள்ளனா். எனவே நகா்ப் பகுதிகளிலுள்ள காட்டெருமைகளை வனப் பகுதிகளுக்கு விரட்டுவதற்கு வனத்துறையினா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.