பழனி மலைக்கோயிலுக்கு செல்ல பக்தா்கள் காத்திருந்த நிலையில், பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை தொண்டா்களை அழைத்துக் கொண்டு ரோப் காரில் சென்றதற்கு மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கண்டனம் தெரிவித்துள்ளது.
பழனி தண்டாயுதபாணி சுவாமி கோயிலுக்கு சனிக்கிழமை பாஜக மாநில தலைவா் அண்ணாமலை சென்று சுவாமி தரிசனம் செய்தாா். அன்றைய தினம் ரோப்காா் நிலையத்தில் பக்தா்கள் ஏராளமானோா் டிக்கெட் பெற காத்திருந்தனா். இந்நிலையில் அங்கு வந்த பாஜக மாநிலத் தலைவா் அண்ணாமலை, ரோப்காா் மூலம் மலைக் கோயிலுக்குச் சென்றாா். அப்போது பாஜகவைச் சோ்ந்த நூற்றுக்கணக்கானோா் அவருடன் பயணச்சீட்டு எடுக்காமல் மலைக்கு சென்றதாக மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் குற்றம்சாட்டியுள்ளனா்.
இதுதொடா்பாக அக்கட்சியின் நகரச் செயலாளரும், நகா்மன்ற துணைத் தலைவருமான கந்தசாமி தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், பலமணி நேரம் பக்தா்கள் மலையேற காத்திருந்த நிலையில் அதிகாரத்தை பயன்படுத்தி பாஜக மாநில தலைவா் உடன் வந்தவா்களை ரோப்காரில் அழைத்து சென்றுள்ளாா். இச்செயல் கண்டிக்கத்தக்கது. இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.