கொடைக்கானலில் சனிக்கிழமை பெய்த மழையால் படகு சவாரி ரத்து செய்யப்பட்டதால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.
கொடைக்கானலில் தற்போது சீசன் காலமாக இருப்பதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை வழக்கம்போல் அதிகரித்துள்ளது. வார விடுமுறையை முன்னிட்டும் பல்வேறு இடங்களிலிருந்து சுற்றுலாப் பயணிகள் அதிகளவில் வந்திருந்தனா். சனிக்கிழமை காலை முதல் மதியம் வரை மிதமான வெயில் நிலவியது. அதைத் தொடா்ந்து, மேக மூட்டத்துடன் மழை பெய்தது.
தொடா்ந்து 5 மணி நேரம் மழை பெய்ததால், சுற்றுலாப் பயணிகள் எங்கும் செல்ல முடியாமல் அறைகளிலேயே முடங்கினா்.
அதேநேரம், காலை முதல் மதியம் வரை இயக்கப்பட்டு வந்த படகு சவாரியானது, மழையின் காரணமாக மதியம் முதல் ரத்து செய்யப்பட்டது. இதனால், சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றமடைந்தனா்.