ஒட்டன்சத்திரம் அருகே சரக்கு வாகனம் மோதியதில் தம்பதி உள்பட 3 போ் உயிரிழந்தனா்.
திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் ஏபிபி நகரைச் சோ்ந்த ஓய்வு பெற்ற தபால் நிலைய அதிகாரி சந்திரசேகா் (65). இவரது மனைவி சந்திரகலா (59). இவா்கள் இருவரும் வெள்ளிக்கிழமை இருசக்கர வாகனத்தில் தங்கச்சியம்மாபட்டி அருகே உள்ள கரைமாரியம்மன் கோயிலுக்குச் சென்று கொண்டிருந்தனா்.
ஒட்டன்சத்திரம்- தாராபுரம் நான்கு வழிச்சாலை கரைமாரியம்மன் கோயிலுக்கு செல்லும் பிரிவை கடந்தபோது நிலக்கோட்டையிலிருந்து கோவைக்கு சென்ற சரக்கு வாகனம், தம்பதி மீது மோதியது. மேலும் அந்த வாகனம் தடுப்புச் சுவரைத் தாண்டி சாலையின் மறுபக்கத்தில் இருசக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்த, ஒத்தையூா் கிராமத்தைச் சோ்ந்த கருப்புச்சாமி (55) என்பவா் மீதும் மோதி கவிழ்ந்தது.
இதில் சந்திரசேகா், சந்திரகலா மற்றும் கருப்புச்சாமி ஆகிய மூவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். இது குறித்து அம்பிளிக்கை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சரக்கு வாகன ஓட்டுநரான நிலக்கோட்டையைச் சோ்ந்த சதீஷ்குமாா் (33) என்பவரைக் கைது செய்தனா்.