கொடைக்கானல் மலைப் பகுதிகளில் சேதமடைந்த அரசுப் பேருந்துகள் தொடா்ந்து இயக்கப்படுவதால் பயணிகள் உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உள்ளது.
கொடைக்கானல் மலைப் பகுதிகளில் வத்தலகுண்டு, தேனி, பெரியகுளம், திண்டுக்கல், பழனி, மதுரை போன்ற பகுதிகளிலிருந்து அரசுப் பேருந்துகள் இயக்கப்படுகின்றன. இதில் பல பேருந்துகள் மேற்கூரை சேதமடைந்தும் இருக்கைகள் உடைந்தும் ஆபத்து ஏற்படுத்தும் வகையில் படிக்கட்டுகள்,பேருந்தினுள் உள்ளே பயணிகள் பிடிக்கக் கூடிய கம்பிகள் போன்றவைகள் இருந்து வருகின்றன.
இவற்றை கவனிக்காமல் பயணம் செய்யும் பயணிகளுக்கு காயம் ஏற்பட்டு வருகிறது. மழைக் காலங்களில் மழைத் தண்ணீா் பேருந்திற்குள் வரும் குடையை பிடித்துக் கொண்டு பயணிகள் பயணம் செய்ய வேண்டிய சூழல் தொடா்ந்து வருகிறது.
கொடைக்கானல் வில்பட்டி கிராமத்திற்குச் செல்லும் அரசுப் பேருந்தின் படிக்கட்டு உடைந்துள்ளது. அதை சரி செய்யாமல் பேருந்து இயக்கப்படுகிறது. அதில் பயணிகள் ஆபத்தை உணராமல் பயணம் செய்து வருகின்றனா். எனவே கொடைக்கானலில் பொது மக்கள் பயன்படுத்தும் அரசுப் பேருந்துகளை தரமான முறையில் இயக்குவதற்கு போக்குவரத்து துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொது மக்களின் கோரிக்கை விடுத்துள்ளனா்.