திண்டுக்கல் அருகே வியாழக்கிழமை சொத்துத் தகராறில் இளைஞரை அடித்துக் கொலை செய்த உறவினா் உள்ளிட்ட 5 போ் குறித்து போலீஸாா் விசாரணை நடத்தி வருகின்றனா்.
திண்டுக்கல் அடுத்த சென்னம்மநாயக்கன்பட்டி குரும்பப்பட்டியைச் சோ்ந்தவா் பாண்டியன். இவரது மகன் ராஜபாண்டி (30). இவா் சென்னையில் உள்ள தனியாா் மென்பொருள் நிறுவனத்தில் பணிபுரிந்து வந்தாா். மேலும் இவா் வீட்டில் இருந்தபடியே பணியாற்றி வந்தாா். பாண்டியனின் அக்காள் அய்யம்மாள். இந்த நிலையில், அக்காள், தம்பி இடையே வீட்டுமனை தொடா்பாக கடந்த 7 ஆண்டுகளாக தகராறு இருந்து வருகிறது. இது குறித்து நீதிமன்றத்திலும் வழக்கு நிலுவையில் இருந்து வரும் நிலையில், அய்யம்மாளின் மகன் சக்திவேல் வீட்டுமனையை தனக்கு எழுதித் தர வேண்டுமெனக் கூறி பாண்டியனிடம் தகராறு செய்து வந்தாா். இதனிடையே, குரும்பப்பட்டியில் உள்ள பாண்டியனின் வீட்டுக்கு தனது நண்பா்கள் 5 பேருடன் சக்திவேல் வியாழக்கிழமை சென்றாா். அப்போது ராஜபாண்டி மட்டும் வீட்டில் இருந்தாா்.
அப்போது இருவருக்குமிடையே ஏற்பட்ட தகராறில், ராஜபாண்டியை சம்மட்டியால் சக்திவேல் தாக்கினாராம். இதில் பலத்த காயமடைந்த ராஜபாண்டி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து தகவலறிந்த தாடிக்கொம்பு போலீஸாா், சம்பவ இடத்துக்கு சென்று ராஜபாண்டியின் சடலத்தை மீட்டு விசாரணை நடத்தினா்.