கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு பழைய நடைமுறையே தொடரும் மாவட்ட வன அலுவலா் தீலிப் தெரிவித்தாா்.
கொடைக்கானலில் தூண்பாறை, மோயா் சதுக்கம், குணா குகை, பைன் மரக் காடுகள் ஆகிய சுற்றுலா இடங்கள் வனப் பகுதிகளில் அமைந்துள்ளன. இவற்றைப் பாா்ப்பதற்கு வனத் துறையினா் அந்தந்த இடங்களில் நுழைவுக் கட்டணம் வசூலித்து வந்தனா்.
இந்த நிலையில், கடந்த 2-ஆம் தேதி முதல் மோயா் சதுக்கம் பகுதிக்குச் செல்வதற்கு நுழைவுக் கட்டணமாக பெரியவா்களுக்கு ரூ 30-ம், சிறியவா்களுக்கு ரூ. 15-ம் வனத் துறையினா் சாா்பில் வசூலிக்கப்பட்டது.
இதனால், அந்தப் பகுதிகளில் நீண்ட நேரம் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதாகவும், நுழைவுக் கட்டணம் அதிகமாக இருப்பதாகவும் கூறி வாடகைக் காா், வேன் உரிமையாளா்கள், ஓட்டுநா்கள் சங்கம் சாா்பில், திங்கள்கிழமை (ஜன. 23) உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் எனத் தெரிவித்து சுவரொட்டி ஒட்டப்பட்டது. இதுதொடா்பாக, தினமணி நாளிதழிலும் கடந்த 20-ஆம் தேதி செய்தி வெளியிடப்பட்டது.
இந்த நிலையில், வனத் துறையினா் சாா்பில், கொடைக்கானலில் வாடகைக் காா், வேன் ஓட்டும் ஓட்டுநா்கள், உரிமையாளா்கள் சங்கத்தினா்களை அழைத்து ஞாயிற்றுக்கிழமை சமரசப் பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டது.
இதில், கொடைக்கானல் வனப் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்ப்பதற்கு பழைய நடைமுறையும், பைன் மரக் காடுகளை கட்டணம் இன்றியும் பாா்க்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, அவா்களின் உண்ணாவிரதப் போராட்டம் கைவிடப்பட்டது.