வேடசந்தூா் பகுதியில் 2 ஆலைகளிலிருந்து தடை செய்யப்பட்ட 500 கிலோ நெகிழிப் பைகள் திங்கள்கிழமை பறிமுதல் செய்யப்பட்டன.
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூா், சுற்றுப்புறப் பகுதிகளிலுள்ள ஆலைகளில் தடை செய்யப்பட்ட நெகிழிப் பைகள் உற்பத்தி நடைபெறுவதாக புகாா் அளிக்கப்பட்டது. இதன்பேரில் திண்டுக்கல் மாவட்ட மாசுக் கட்டுப்பாட்டு வாரிய உதவிப் பொறியாளா் உதயா, வேடசந்தூா், அகரம் பேரூராட்சிகளைச் சோ்ந்த ஊழியா்களுடன் சென்று திங்கள்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
வேடசந்தூரில் செயல்பட்டு வந்த ஆலையில், தடை செய்யப்பட்ட 200 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல, அகரம் பேரூராட்சிக்குள்பட்ட காக்காத்தோப்புப் பகுதியிலுள்ள ஆலையில் 300 கிலோ நெகிழிப் பைகள் பறிமுதல் செய்யப்பட்டன.
இதையடுத்து, இரு ஆலைகளுக்கும் தலா ரூ. 10 ஆயிரம் அபாரதம் விதிக்கப்பட்டது.