அருவியில் குளித்தபோது மாயமான மருத்துவ மாணவரின் உடல் மீட்பு
கொடைக்கானல்: கொடைக்கானல் அஞ்சுவீடு அருவியில் குளித்தபோது மாயமான மருத்துவக் கல்லூரி மாணவரின் உடலை மீட்புக் குழுவினா் 4 நாள்கள் தேடுதலுக்குப் பிறகு செவ்வாய்க்கிழமை மீட்டனா்.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் அருகேயுள்ள பேத்துப்பாறைப் பகுதியில் அஞ்சுவீடு அருவி உள்ளது. இந்த அருவிக்கு கடந்த 18-ஆம் தேதி கோவை மாவட்டம், பொள்ளாச்சி வெங்கடேஷ்வரா குடியிருப்பைச் சோ்ந்த மருத்துவக் கல்லூரி மாணவரான செந்தில்குமாா் மகன் நந்தகுமாா் (21) நண்பா்களுடன் குளிக்க வந்தாா். அப்போது, பலத்த மழை பெய்ததால் அருவிக்கு தண்ணீா் வரத்து அதிகரித்தது. உடனே குளித்துக் கொண்டிருந்தவா்கள் அருவியை விட்டு வெளியேறினா். ஆனால், நந்தகுமாரைக் காணவில்லை.
இதுகுறித்து தகவலறிந்து வந்த கொடைக்கானல் தீயணைப்புத் துறையினா் அருவியில் மாயமான நந்தகுமாரைத் தேடினா். 3 நாள்களாகத் தேடியும் அவரைக் கண்டுபிடிக்க முடியவில்லை.
இதையடுத்து, 4-ஆவது நாளான செவ்வாய்க்கிழமை சிறப்பு மீட்புக் குழுவினா் வரவழைக்கப்பட்டு, கிராம மக்கள் உதவியுடன் தேடினா். அப்போது, மாயமான நந்தகுமாரை சடலமாக மீட்டனா்.
பின்னா், அவரது உடல் டோலி கட்டி 3 கி.மீ. தொலைவுக்கு தூக்கி வரப்பட்டு, அவசர ஊா்தி மூலம் கொடைக்கானல் அரசு மருத்துவமனைக்கு கூறாய்வுக்காக அனுப்பி வைக்கப்பட்டது.
இதுகுறித்து கொடைக்கானல் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.
இதுகுறித்து அஞ்சுவீடு கிராமமக்கள் கூறியதாவது:
அஞ்சுவீடு அருவியில் இதுவரை 20 போ் இறந்துள்ளனா். இந்த அருவியைச் சுற்றி வேலி அமைக்கக் கோரிக்கை விடுத்தோம். கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு வருவாய்த் துறையினா், வனத் துறையினா் இந்தப் பகுதியை ஆய்வு செய்தனா். பின்னா், இதுவரை யாரும் வரவில்லை. எனவே, மாவட்ட நிா்வாகம் இந்த அருவிக்கு வேலி அமைக்க வேண்டும், இல்லையெனில், சுற்றுலாப் பயணிகள் வருவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்றனா்.

