மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் மூளைச்சாவு அடைந்த எலக்ட்ரீசியனின் உடல் உறுப்புகளை தானம் அளித்ததன் மூலம் 5 நோயாளிகளுக்கு வாழ்வு அளிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக மருத்துவமனை நிர்வாகம் புதன்கிழமை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு:
மதுரை அய்யர்பங்களாவைச் சேர்ந்த எலக்ட்ரீசியன் ஜெபராஜ்(50). கடந்த இரண்டு நாள்களுக்கு முன்பு ஒத்தக்கடை பகுதியில் ஏற்பட்ட இரு சக்கர வாகன விபத்தில் காயமடைந்த நிலையில் மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டும் பலனின்றி அவர் மூளைச்சாவு அடைந்தார். இதையடுத்து உடல் உறுப்பு தானம் பற்றி அவரது மனைவி சாராவிடம் மருத்துவர்கள் எடுத்துரைத்தனர். இதைத்தொடர்ந்து தனது கணவரின் உடல் உறுப்புகள் மூலம் 5 நோயாளிகளுக்கு வாழ்வு அளிக்கப்படும் என்பதால் உடல் உறுப்புகளை தானம் செய்ய அவர் ஒப்புக்கொண்டார்.
மருத்துவ இயக்குநர் ரமேஷ் அர்த்தநாரி தலைமையில் அறுவைச் சிகிச்சை நிபுணர் மோகன், சிறுநீரகவியல் நிபுணர் ஆண்ட்ரூஸ், சிறுநீரியல் அறுவைச் சிகிச்சை நிபுணர் ரவிச்சந்திரன், பால் வின்சென்ட்ராஜ் உள்பட 20-க்கும் மேற்பட்ட மருத்துவர்கள் அறுவைச் சிகிச்சையில் பங்கேற்றனர்.
5 மணி நேர அறுவைச் சிகிச்சைக்குப்பிறகு உடல் உறுப்புகள் அகற்றப்பட்டன. இதில் ஒரு கல்லீரல், ஒரு சிறுநீரகம் ஆகியவை மீனாட்சி மிஷன் மருத்துவமனையில் சிகிச்சைபெறும் இரு நோயாளிகளுக்கும், மற்றொரு சிறுநீரகம் நெல்லை கிட்னி கேர் மருத்துவமனைக்கும், கண்கள் மதுரை அரவிந்த் மருத்துவமனைக்கும் தானமாகக் கொடுக்கப்பட்டது என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.