திருப்பரங்குன்றத்தை அடுத்த தனக்கன்குளத்தில் குழந்தை உள்பட இருவருக்கு டெங்கு அறிகுறி இருந்ததால் சுகாதாரத்துறையினர் செவ்வாய்க்கிழமை அப்பகுதி பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தினர்.
தனக்கன்குளம் அரவிந்த் நகரைச் சேர்ந்த ஈசா(1) என்ற ஒரு வயது குழந்தைக்கு மர்ம காய்ச்சல் ஏற்பட்டது. இதையடுத்து மதுரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் குழந்தை சிகிச்சை பெற்று வருகிறது. இதேபோல, எம்.ஜி.ஆர் நகரைச் சேர்ந்த ஜானகிராம் என்பவருக்கும் மர்மக் காய்ச்சல் ஏற்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். இதையடுத்து திருப்பரங்குன்றம் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் தங்கசாமி தலைமையிலும், மாவட்ட மலேரியா அலுவலர் விக்டர் மேற்பார்வையிலும், 3 மருத்துவர்கள், 6 சுகாதார ஆயாவாளர்கள், 12 கிராம செவிழியர்கள் உள்ளிட்டோர் தனக்கன்குளம் அரவிந்த்நகர், எம்.ஜி.ஆர் நகர், பி.ஆர்.சி காலனி உள்ளிட்ட பகுதிகளில் வீடுவீடாகச் சென்று பொதுமக்களுக்கு காய்ச்சல் உள்ளதா என பரிசோதித்தனர்.
மேலும் பொதுமக்களுக்கு டெங்கு காய்ச்சல் குறித்த விழிப்புணர்வும் ஏற்படுத்தப் பட்டது. வீடுதோறும் சுமார் 710 நபர்களுக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கப் பட்டது. அந்த பகுதியைச் சுற்றிலும் புகை மருந்தும் அடிக்கப்பட்டது.
மேலும் தொடர்ந்து 3 நாள்களுக்கு அப்பகுதியினருக்கு நிலவேம்பு கசாயம் கொடுக்கவும் திட்டமிடப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறையினர் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.